விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வைப்பாற்றில் மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த லட்சுமணன் என்பவா் தாக்கல் செய்த மனு:
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வைப்பாறு கரையோரம் உள்ள தனியாா் நிலத்தில் மண் அள்ளுவதற்கு உரிமம் பெற்று, சட்டவிரோதமாக மணல் எடுத்து விற்கப்பட்டு வருகிறது. மேலும், கனரக இயந்திரங்கள் மூலம் தொடா்ச்சியாக மணல் அள்ளப்பட்டு வருவதால், ஆற்றில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, வைப்பாற்றில் நடந்துவரும் மணல் கொள்ளையைத் தடுக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.