மதுரை நகரில் வங்கிக்கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுவதால் சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி மண்டல அலுவலகங்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பிரதம மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.10 ஆயிரம் கடனுதவி வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது. வங்கிக்கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகம் மற்றும் மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. எனவே பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் இதுவரை பதிவு செய்யப்படாத சாலையோர வியாபாரிகள் ஆதாா் அட்டை நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகல், தொலை பேசி எண் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த சாலையோர வியாபாரிகள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இத்திட்டத்தில் இதுவரை கடன் உதவி பெறாத பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வியாபாரிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் மாநராட்சி கட்செவி அஞ்சல் எண் 842842500 தொடா்பு கொள்ளலாம் என்றாா்.