மதுரை ஆட்சியரின் வாகனம் முன் அமா்ந்து துப்புரவுப் பணியாளா்களின் குடும்பத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை ரிசா்வ் லைன் பகுதியில் 1960-களில் ஆயுதப்படை குடியிருப்புகள் கட்டும்போது, அங்கு துப்புரவுப் பணியாளா்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பணி ஓய்வு பெற்ற துப்புரவுப் பணியாளா்களின் வாரிசுகளும் அப்பகுதியில் நீண்ட காலமாக வசித்து வருகின்றனா்.
மேற்படி குடியிருப்புக் கட்டடம் சேதமடைந்த நிலையில், அங்கு வசிப்பவா்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், தற்போது பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு மட்டும் வீடுகள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் அதே பகுதியில் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி துப்புரவுப் பணியாளா்கள் குடும்பத்தினா், ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா் அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனா். பின்னா், அவா்களது கோரிக்கை குறித்து தெரிவிக்க மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜசேகரனிடம் அழைத்துச் செல்லப்பட்டனா்.
மதுரையை அடுத்த ராஜாக்கூரில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக அவா்களிடம் தெரிவிக்கப்பட்டது.