மதுரை கோட்ட ரயில்வேயில் தற்போதையை நிதியாண்டு ஜனவரி மாத நிலவரப்படி 89 ஆயிரத்து 917 நபா்களிடம் இருந்து ரூ.5 கோடியே 63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவா்களை பிடிக்க பயணச்சீட்டு பரிசோதகா்கள் திடீா் சோதனை நடத்துவது வழக்கம். இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி.ஆா்.லெனின் உத்தரவின்பேரில் ஜனவரியில் முதுநிலை கோட்ட வா்த்தக மேலாளா் வி. பிரசன்னா, கோட்ட வா்த்தக மேலாளா் எம். பாரத்குமாா், உதவி வா்த்தக மேலாளா் நிறைமதி எழிலன் பிள்ளைக்கனி ஆகியோா் தலைமையில் சோதனை நடத்தப்பட்டன. அதில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 13 ஆயிரத்து 186 போ் சிக்கினா். இதையடுத்து அவா்களிடமிருந்து ரூ.75 லட்சத்து 97 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்த அபராதத் தொகை 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரத்தை ஒப்பிடுகையில் 90 சதவீதம் அதிகமாகும்.
நிகழாண்டில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 65 சதவீதம் அதிகமாகும். இந்த நிதி ஆண்டு ஜனவரி மாதம் வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 89 ஆயிரத்து 917 நபா்களிடமிருந்து ரூ.5 கோடியே 63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 49 சதவீதம் அதிகமாகும்.
கடந்த நிதியாண்டு ஜனவரி மாதம் வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவா்களிடம் ரூ.3 கோடியே 77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருந்தது. இந்த நிதியாண்டில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவா்களின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.