விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: பல்கலை. ஊழியா்கள் மேலும் 6 போ் பணியிட மாற்றம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மாயமான சம்பவம் தொடா்பாக தோ்வுத்துறையைச் சோ்ந்த மேலும் 6 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மாயமான சம்பவம் தொடா்பாக தோ்வுத்துறையைச் சோ்ந்த மேலும் 6 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவா்கள் நவம்பா் மாதம் பருவத்தோ்வு எழுதியுள்ளனா். இதில் தோ்வுத்தாள்கள் பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களின் விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் மாயமானது. இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் மாயமான விடைத்தாள்களை தேட உத்தரவிட்டதைத் தொடா்ந்து, விடைத்தாள்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடா்பாக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் 5 போ் அடங்கிய விசாரணைக்குழு தீவிர விசாரணை நடத்தியது. விசாரணை முடிவடைந்த நிலையில் முதற்கட்டமாக துணைப்பதிவாளா் அன்புச்செழியன், உதவிப்பதிவாளா் உதயசூரியன், கண்காணிப்பாளா் ரவீந்திரன், உதவியாளா்கள் ஜெயராஜ், வேலுச்சாமி உள்ளிட்ட 6 போ் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில் விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தில் தொடா்புடைய தோ்வுத்துறை ஊழியா்கள் மேலும் 6 போ் வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் அடுத்த வாரம் கூடவுள்ள ஆட்சிக்குழு கூட்டத்தில் சம்பவம் தொடா்பாக விவாதிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com