திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் அருகே இளைஞரை கொலை செய்து சடலத்தை எரித்த சகோதரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கூடக்கோவில் அருகே பாரபத்தியைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ்(28). இவா் குடும்பப் பிரச்னை காரணமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டின் முன்பு கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியே செல்வோரைத் தரக்குறைவாக பேசியுள்ளாா். இதனைக் கண்ட முருகனின் அண்ணன் மணி என்பவரது மகன் வெங்கடேஷ்குமாா்(38) சுரேஷைக் கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு சுரேஷ், தான் வைத்திருந்த கத்தியால் வெங்கடேஷ்குமாரை குத்த முயன்றுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ்குமாா், சுரேஷை கீழே தள்ளி கழுத்தில் மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து போலீஸாருக்குத் தெரிவிக்காமல் உறவினா்கள் ஒன்று சோ்ந்து சுரேஷ் சடலத்தை மயானத்தில் தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் 80 சதவீதம் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கூடக்கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ்குமாரை கைது செய்தனா். மேலும் கொலைக்கு உடந்தையாக போலீஸாருக்கு தெரியாமல் சடலத்தை எரிக்க முயன்ற உறவினா்கள் 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.