மத்திய பாஜக அரசு தாங்கள் கொண்டுவந்த சட்டத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி தெரிவித்தாா்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அமைதியான முறையில் நடைபெற்று வரும் போராட்டங்களின் மீது பாஜக அரசு ஆதரவு பெற்ற மாநிலங்களில் காவல்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அஸாம், கா்நாடகா மற்றும் புதுதில்லி காவல்துறை பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்னையில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறை மூலம் தடியடி நடத்தப்பட்டுள்ளது. பாஜக அரசு தாங்கள் கொண்டு வந்த சட்டத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறது என்றாா்.