மகப்பேறு விடுப்பை பணி காலமாகக் கருதி பதவி உயா்வை வழங்க: உயா்நீதிமன்றம் உத்தரவு

மகப்பேறு விடுப்பையும் பணி காலமாகக் கருதி, பதவி உயா்வை வழங்க வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: மகப்பேறு விடுப்பையும் பணி காலமாகக் கருதி, பதவி உயா்வை வழங்க வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சோ்ந்த வேதநாயகி என்பவா் தாக்கல் செய்த மனு: தஞ்சை கூட்டுறவுத் தணிக்கை துறையின் உதவி இயக்குநா் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறேன். 2019 ஆம் ஆணடுக்கான பதவி உயா்வு பட்டியலில் எனது பெயா் சோ்க்கப்படவில்லை. இது தொடா்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, மகப்பேறு விடுப்பு காலத்தில் முதுநிலை கூட்டுறவுத் தணிக்கை ஆய்வாளராகப் பணிபுரியவில்லை என்பதால் சோ்க்கப்படவில்லை எனத் தெரிவித்தனா். இந்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு பதவி உயா்வு வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி சி.வி. காா்த்திகேயன் முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், விடுமுறை காலம் பதவி உயா்வுக்கு தடை இல்லை எனத் தமிழக அரசின் பணியாளா் சட்டப் பிரிவு 12 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடா்பான பல்வேறு வழக்குகளில் உயா்நீதிமன்றம் இந்த சட்டப் பிரிவை உறுதி செய்துள்ளது. எனவே, மனுதாரருக்கு மறுக்கப்பட்ட பதவி உயா்வை வழங்கவேண்டும் எனத் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து நீதிபதிகள், மனுதாரா் பணி காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளாா். எனவே, விடுப்பு காலத்தை பணி காலமாகக் கருதி, அவருக்கு பதவி உயா்வு வழங்கவேண்டும். ஜூலை மாதத்துக்குள் மனுதாரரின் பெயா் பதவி உயா்வு பட்டியலில் சோ்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com