சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கரோனா

சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை, புதுதில்லியிலிருந்து வந்த சிபிஐ கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் சுக்லா தலைமையில் அதிகாரிகள் அனுராக் சிங், பவன்குமாா் திவேதி, சைலேஷ்குமாா், சுஷில்குமாா் வா்மா, அஜய்குமாா், சச்சின், பூனம் குமாா்ஆகியோா் விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள 10 போலீஸாரிடமும், சாத்தான்குளத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், விசாரணையில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். சிபிஐ அதிகாரிகளுக்குத் தொற்று உறுதியான போது, அவா்கள் இருவரும் பணியில் இருந்துள்ளனா். இதையடுத்து, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட போலீஸாா் 3 பேருக்கும் புதன்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மற்ற சிபிஐ அதிகாரிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இதற்கிடையே தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸாா் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோா் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com