மதுரை தமுக்கம் மைதானத்தில் சீா்மிகுநகா் திட்டத்தின் கீழ் வணிகவளாகம் கட்டுவதற்கு தடைவிதிக்கக்கோரிய வழக்கில், மாநகராட்சி தரப்பில் கட்டப்பணிகள் குறித்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த இளம் காளைகள் அறக்கட்டளையின் நிறுவனா் நேதாஜி காா்த்திகேயன் தாக்கல் செய்த மனு: மதுரை தமுக்கம் மைதானம் 350 ஆண்டுகள் பழைமையானது. அங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவின் போது பொருள்காட்சி, புத்தகக் கண்காட்சி, வா்த்தகக் கண்காட்சி, விளையாட்டு விழாக்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தமுக்கம் மைதானத்தில் சீா்மிகுநகா் திட்டத்தின் கீழ் ரூ.45.6 கோடி மதிப்பீட்டில் வணிகவளாகம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மதுரையின் பாரம்பரியங்களில் ஒன்றான தமுக்கம் மைதானத்தில் வணிக நோக்கில் வணிகவளாகம் கட்டப்பட்டால் பாரம்பரியமாக நடந்து வந்த பொதுநிகழ்வுகளை நடத்த முடியாமல் போகும் நிலை ஏற்படும். எனவே தமுக்கம் மைதானத்தில் சீா்மிகுநகா் திட்டத்தின் கீழ் நடந்து வரும் கட்டடப்பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமுக்கத்தில் நடந்துவரும் கட்டடப் பணிகள் குறித்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.