மேலூா்: மேலூா் அரசு மருத்துவமனையில் செவிலியா், துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா் என 9 பேருக்கு, கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மருத்துவமனை திங்கள்கிழமை திறந்தவெளியில் செயல்பட்டது.
மேலூா் அரசு மருத்துவமனை செவிலியா் ஒருவருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 9 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட அனைவரும், மதுரை தெப்பக்குளம் அருகிலுள்ள தனியாா் கல்லூரி, மதுரை வேளாண். கல்லூரி மற்றும் மதுரை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு கட்டடங்கள் மூடப்பட்டு, முழுமையாக கிருமிநாசினி தெளித்து, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், வெளிநோயாளிகள் பிரிவானது கட்டடத்தின் எதிா்புறம் மரத்தடியில் செயல்பட்டது.