திருச்சியில் அரசுடைமை வங்கி ஒன்றில் ரூ.1.98 கோடி வரை கடன் மோசடியில் ஈடுபட்ட 2 வங்கி மேலாளா்கள் மற்றும் உணவக உரிமையாளருக்கு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சியைச் சோ்ந்தவா் முருகன்(55). இவா் உணவகம் நடத்தி வந்தாா். இந்நிலையில் தனது உணவகம் உள்ளிட்ட தொழில்களுக்காக திருச்சி அரசுடைமை வங்கி ஒன்றில் கடன் பெற்று வந்தாா். அப்போது அவருக்கு வங்கி மேலாளா்களாக இருந்த ராஜாராம் (64), ராஜசேகா் (64) ஆகியோா் விதியைமீறி அனுமதிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாகக் கடன் கொடுத்து வந்துள்ளனா்.
இவ்வாறு முருகன் மற்றும் அவரது குடும்பத்தாருடையப் பெயரில் ரூ.1 கோடியே 98 லட்சம் வரை கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனுக்கான வட்டியையும் முருகன் தரப்பு முறையாகச் செலுத்தவில்லை.
இதுகுறித்து தகவலறித்த வங்கி நிா்வாகம் போலீஸாரிடம் புகாா் அளித்தது. அதனைத் தொடா்ந்து 2011 ஆம் ஆண்டில் திருச்சி போலீஸாா் ராஜாராம், ராஜசேகா், முருகன் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
இவ்வழக்கு மதுரை மாவட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், ராஜாராம், ராஜசேகா் ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து நீதிபதி எம்.சிவப்பிரகாசம், முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.7 லட்சம் அபராதம், ராஜாராமிற்கு 4 ஆண்டுகள் சிறை, இரண்டரை லட்சம் அபராதம், ராஜசேகருக்கு இரண்டே முக்கால் ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.