மதுரையில் நடைபெற இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலவரையன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருமுறை பல்வேறு காரணங்களுக்காக முகாம் நடைபெறும் தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது கரோனோ வைரஸ் பரவுதலைத் தடுக்கும் விதமாக முகாம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்காக மதிப்பீட்டு முகாம் மாா்ச் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களைத் தயாரிக்கும் கான்பூா் அலிம்கோ நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், எவ்வித முகாம்கள் நடத்த வேண்டாம் என மத்திய சமூக நீதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மதுரை மக்களவைத் தொகுதியில் நடைபெற இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா்.