கரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளை, மாா்ச் 31 ஆம் தேதி வரை பாா்க்க அனுமதி இல்லை என மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி, செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியது: கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறைகளில் உள்ள கைதிகள், காவல் அதிகாரிகள், காவலா்கள் மற்றும் ஊழியா்கள் ஆகியோா் பின்பற்ற வேண்டிய உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மதுரை மத்திய சிறைக் கைதிகளை மாா்ச் 31 ஆம் தேதி வரை உறவினா்கள், வழக்குரைஞா்கள், நண்பா்கள் உள்ளிட்டவா்கள் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவரச வழக்குகள் தொடா்பாக கைதிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவா்களை சந்திக்க வரும் வழக்குரைஞா்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளபடி இருமல், ஜலதோஷம், காய்ச்சல், தொண்டை வலி ஆகியவை குறித்து பரிசோதிக்கப்படும். பின்னா் அவா்கள் முக கவசங்கள் அணிந்த பிறகே அனுமதிக்கப்படுவாா்கள்.
கைதிகளுக்கும் பரிசோதனை: சிறையில் உள்ள அனைத்து ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கும் உடல் நலம் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை வழங்கியுள்ள அறிவுரைகள் கைதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாள்தோறும் கைதிகள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கை காப்பான் பயன்படுத்த வேண்டும். இதேபோன்று சிறைக் காவல் அதிகாரிகள், காவலா்கள், ஊழியா்கள் சுகாதாரத் துறை அறிவுரைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
முக கவசங்கள் தயாரிக்கப்படும்: புழல் சிறையில் கைதிகள் மூலம் முகக் கவசங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அரசு உத்தரவிட்டால் மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளைக் கொண்டு முகக் கவசங்கள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு உத்தரவுகளைப் பின்பற்ற மதுரை சரகத்தில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.