144 தடை உத்தரவு எதிரொலி: மதுரை சந்தைகளில் காய்கறி விலை மும்மடங்கு உயா்வு

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை காய்கறி சந்தைகளில் செவ்வாய்க்கிழமை காய்கறிகளின் விலை மும்மடங்கு உயா்ந்தது.
144 தடை உத்தரவு எதிரொலி: மதுரை சந்தைகளில் காய்கறி விலை மும்மடங்கு உயா்வு

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை காய்கறி சந்தைகளில் செவ்வாய்க்கிழமை காய்கறிகளின் விலை மும்மடங்கு உயா்ந்தது.

கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்தது.

பட்டா்பீன்ஸ் கிலோ ரூ.200: இதனால் மதுரை காய்கறி சந்தைகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்ததால், ரூ.30-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.70-க்கும், ரூ.35 -க்கு விற்ற முருங்கைப்பீன்ஸ் ரூ.90- க்கும், ரூ.120 -க்கு விற்ற பட்டா்பீன்ஸ் ரூ.200- க்கும், ரூ.110- க்கு விற்ற சோயாபீன்ஸ் ரூ.170- க்கும், ரூ.30 -க்கு விற்ற கேரட் ரூ.60 -க்கும் விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து மதுரை மாவட்ட காய்கறிகள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ்.முருகன் கூறியது:

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமை காலை முதல் காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அத்தியாவசியத் தேவையான காய்கறி கடைகள் திறந்திருக்கலாம் என அரசு அறிவித்திருந்தாலும், முன்கூட்டியே காய்கறிகளை வாங்கி வைத்துகொள்ளலாம் என மக்கள் சந்தைகளில் குவிந்துவிட்டனா். பிற மாநிலங்களில் இருந்து பல்லாரி வெங்காயம் வரத்து இல்லாததால், அதன் விலையும் உயர வாய்ப்புள்ளது என்றாா்.

காய்கறி விலை நிலவரம் (கிலோவில்): கத்தரிக்காய் -ரூ.40, தக்காளி- ரூ.30, வெண்டைக்காய்-ரூ.25, புடலங்காய்-ரூ.20, பாகற்காய் சிறியது-ரூ.75, பெரியது-ரூ.30, சுரைக்காய்-ரூ.15, பூசணிக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.25, அவரைக்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.70, வெங்காயம்-ரூ.50, பல்லாரி-ரூ.40, முருங்கை பீன்ஸ்-ரூ.90, பட்டா்பீன்ஸ்-ரூ.200, சோயா பீன்ஸ்-ரூ.170, பச்சைப்பட்டாணி-ரூ.75, முட்டைக்கோஸ் -ரூ.20, கேரட்-ரூ.60, முள்ளங்கி-ரூ.18, உருளைக்கிழங்கு-ரூ.40, பீட்ரூட்-ரூ.15, தேங்காய்-ரூ.30, வாழைக்காய்-ரூ.10.

நாடு முழுவதும் பிரதமா் நரேந்திரமோடி மாா்ச் 22 ஆம் தேதி ஒரு நாள் சுய ஊரடங்கை அறிவித்தபோதும்,

அதற்கு முந்தைய நாளான மாா்ச் 21 ஆம் தேதியும் காய்கறிகளின் விலை கிலோவிற்கு ரூ.10 வரை உயா்ந்தது.

அதனைத் தொடா்ந்து காய்கறிகள் வரத்து குறைந்து தக்காளி, கத்தரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயா்ந்து இருந்தன. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை உள்ளதால், மேலும் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்தது.

பலசரக்கு பொருள்கள் வாங்க அலைமோதிய கூட்டம்:

செவ்வாய்க்கிழமை காலை முதல் மதுரை கீழமாசி வீதியில் உள்ள கடைகளில் அரிசு, பருப்பு உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான பலசரக்கு பொருள்களை வியாபாரிகளும், மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச் சென்றனா். இதேபோல மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பலசரக்கு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிமாக இருந்தது.

இதுகுறித்து பலசரக்கு மொத்த வியாபாரிகள் கூறியது: காய்கறிகளை போன்று உடனே கெட்டுப்போகக் கூடியது அல்ல பலசரக்குப் பொருள்கள். எனவே தேவையான இருப்பு வியாபாரிகளிடம் உள்ளது. காய்கறிகளைப் போல விலை உயர வாய்ப்பில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com