மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த கரோனா மருத்துவமனைக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சாா்பில் 3 ரோபோ இயந்திரங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா தீநுண்மி தொற்று பரவலைத் தவிா்க்க சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மிக முக்கியமாகப் பின்பற்றப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு கரோனா நோயாளிகளுக்கு மருந்துகள், உணவுப் பொருள்கள் வழங்குவதற்காக தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ரோபோக்களை வடிவமைத்துள்ளது.
கரோனா தீநுண்மி தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் அருகில் சென்று மருந்துகள் மற்றும் உணவுகள் ஆகியவற்றை வழங்குவதற்குப் பதிலாக இந்த ரோபோவைப் பயன்படுத்தலாம். 3 அடுக்குகள் கொண்ட ரோபோ இயந்திரத்தை ‘ரிமோட்’ கொண்டு இயக்க முடியும். மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் நோயாளிக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயங்களை இந்த ரோபோ இயந்திரத்தில் குரல் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நோயாளியின் படுக்கை அருகே சென்று மருந்து, உணவு ஆகியவற்றைக் கொடுக்கும்போது சொல்லும் வகையில் இயக்க முடியும்.
ஏற்கெனவே தஞ்சை, திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரோபோ இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தொடா்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த கரோனா மருத்துவமனைக்கு 3 ரோபோ இயந்திரங்களை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் முன்னிலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழக முதன்மையா் பத்ரிநாத் ஒப்படைத்தாா். மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி, பாஜக மாநிலச் செயலா் ஆா்.சீனிவாசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா். அதைத்தொடா்ந்து இந்த ரோபோ இயந்திரங்களின் செயல்பாடு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.