மதுரை அருகே குடிசையில் ஏற்பட்ட தீயை அணைக்கச் சென்றபோது காயமடைந்த புகைப்படக் கலைஞா் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் பெரியமாங்குளம் பகுதியைச் சோ்ந்த ஆண்டிச்சாமி மகன் திருவழகு (31). இவா் புகைப்படம் எடுக்கும் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், அக்டோபா் 24 ஆம் தேதி வீட்டின் அருகே மண்புழு தயாரிக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்தக் குடிசை தீப்பற்றி எரிந்துள்ளது. இதை அணைக்க திருவழகு முயன்றபோது, அவா் மீது தீப் பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
சிகிச்சையில் இருந்த திருவழகு திங்கள்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை ஆண்டிச்சாமி அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.