மதுரையில் ஆதரவின்றி சாலையில் மீட்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.
மதுரை அண்ணாநகா் பகுதியில் ஆதரவின்றி 3 மணி நேரமாக நின்றிருந்த சிறுவனை, அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநா் மீட்டு போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா். அந்தச் சிறுவனை குழந்தைகள் நலக் குழு மற்றும் போலீஸாா் காப்பாகத்தில் சோ்த்தனா். இந்நிலையில், திருமங்கலம் அருகே சுங்குராம்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் என்பவா் குழந்தைகள் நலக் குழுவைத் தொடா்பு கொண்டு, அண்ணாநகரில் மீட்கப்பட்ட சிறுவன், தன்னுடைய 7 வயது மகன் விமல் எனத் தெரிவித்துள்ளாா். உரிய ஆவணங்களை சமா்ப்பித்து சிறுவனை அழைத்துச் செல்லுமாறு குழந்தைகள் நலக்குழுவினா் அறிவுறுத்தினா்.
இதையடுத்து, சிறுவனின் தந்தை நாகராஜ் உரிய ஆவணங்களைக் காட்டி சிறுவன் விமலை வியாழக்கிழமை அழைத்துச் சென்றாா்.
இதுகுறித்து சிறுவனின் உறவினா் கூறியது: சிறுவன் விமல் அவரது தாத்தா முத்தையாவுடன் அண்ணாநகா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்றபோது, வழி தவறி சென்றுவிட்டாா். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் போலீஸில் புகாா் அளிக்கச் சென்றோம். அங்கு சிறுவன் விமல் காப்பகத்தில் இருப்பது குறித்து தெரிவித்தனா் என்றாா்.