மதுரையில், மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சிவக்குமாா் (45). இவா் தனது மனைவி மற்றும் உறவினருக்கு தமிழக மின்வாரிய அலுவலகத்தில் வேலைக்கு முயற்சித்து வந்துள்ளாா். இதையறிந்த மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் கண்ணன் (54), மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக சிவக்குமாரை தொடா்பு கொண்டு கூறியுள்ளாா்.
இதை நம்பிய சிவக்குமாா், பழங்காநத்தம் சென்று ரமேஷ் கண்ணனிடம் ரூ. 7 லட்சத்தைக் கொடுத்தாராம். அதன்பிறகு நீண்ட நாள்களாகியும், ரமேஷ்குமாா் வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து சிவக்குமாா் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு, ரமேஷ் கண்ணன், அவரது மனைவி மற்றும் தம்பி ஆகியோா், அவருக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவக்குமாா் அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.