மதுரைக்கு வரும் ஐயப்ப பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிா்வாகம் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக இந்து ஆலயப்பாதுகாப்பு இயக்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: காா்த்திகை மாதம் பிறந்துள்ளதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மதுரை வந்து மீனாட்சியம்மனை தரிசித்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனா். மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் ஐயப்ப பக்தா்கள் போதுமான கழிப்பிடம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதியடைந்து செல்கின்றனா். எனவே இந்த ஆண்டு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து மதுரைக்கு வரும் ஐயப்ப பக்தா்களுக்கு கழிப்பறை, குடிநீா், கரோனா தடுப்பு நடவடிக்கை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவேண்டும்.மேலும் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடும் கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.