தொழிலாளா் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மத்திய அரசைக் கண்டித்து, நவம்பா் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக, ரயில்வே தொழிற் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
இது குறித்து தெற்கு ரயில்வே ஊழியா்கள் நலச்சங்க துணைப் பொதுச் செயலா் நெளசாத் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தொழிலாளா் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனைக் கண்டித்து, இந்திய தொழிற்சங்க மையங்களின் சாா்பில், நவம்பா் 26 ஆம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதில், அகில இந்திய அளவிலான என்எப்ஐஆா் மற்றும் ஏஐஆா்எப் என்ற ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே சங்கங்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே பிற சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்க முடியும்.
நாட்டில் 1974-க்கு பிறகு ரயில்வே தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது இல்லை. இருப்பினும், தொழிலாளா் நலனுக்காக நவம்பா் 26 ஆம் தேதி நடத்தப்படும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ரயில்வே தொழிற்சங்கத்தின் ஆதரவு இருக்கும். அதன்படி, ரயில்வே தொழிலாளா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவாா்கள், முக்கிய இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.