மதுரை: மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தைச் சோ்ந்த அழகா்சாமி மகன் சுடலை மாரியப்பன் (43). இவா் போக்ஸோ வழக்கில் ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு, செப்டம்பா் 30 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டாா். இந்நிலையில், சிறைக்குள் சுடலை மாரியப்பன், தான் அணிந்திருந்த கைலியால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரை சிறைக் காவலா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவா்கள் பரிசோதனை செய்துவிட்டு, சுடலை மாரியப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.