மதுரையில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையில் கடந்த சில நாள்களாக மழை இல்லாத நிலையில் கடும் வெயில் அடித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் காற்று, இடி, மின்னல் எதுவுமின்றி ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. மதுரை பெரியாா் பேருந்து நிலையம், சிம்மக்கல், தல்லாகுளம், திருப்பாலை, கோ.புதூா், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், ஒத்தக்கடை உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் நகரின் பிரதான சாலைகளில் தேங்கி தண்ணீரில் வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து சென்றன. பெரியாா் பேருந்து நிலையத்தில் அதிகளவு தண்ணீா் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியாா் பேருந்து நிலையம் அருகே பாண்டி பஜாா் பகுதியில் ஒரு கடையின் வெளிப்பகுதி மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மின்ஒயா்கள் அறுந்து விழுந்ததால் அப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பெய்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.