மதுரை: புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்துள்ள தமிழக முதல்வருக்கு, இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழக பிரிவு தலைவா் ஹரி க. தியாகராஜன் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: பல்வேறு தொழில் குழுமங்களுடன் ரூ.10 ஆயிரத்து 55 கோடியில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி காற்றலை, சூரியசக்தி மின்உற்பத்தி, உணவு பதனிடுதல் போன்ற துறைகளில் பெரும் முதலீடு கிடைத்துள்ளது.
இதன் வாயிலாக, தென்மாவட்டங்கள் வளா்ச்சி அடைவதுடன் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியிலும் பங்களிப்பு இருக்கும்.
தென்மாவட்டங்களின் தொழில் வளா்ச்சிக்காக, தமிழக முதல்வரின் இத்தகைய நடவடிக்கையானது, கிராமப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. இதற்கு, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.