மதுரையில் அரசு உத்தரவை மீறி மாணவா்களை பள்ளிக்கு வரவைப்பதாக தனியாா் பள்ளிகள் மீது தொடா்ந்து புகாா்கள் வருவதாக கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா தொற்று எதிரொலியாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் பொது முடக்கத்தில் இருந்து கல்வி நிலையங்களுக்கு எவ்வித தளா்வும் அளிக்கப்படவில்லை.
மதுரையில் உள்ள தனியாா் பள்ளிகள் அரசு உத்தரவை மீறி மாணவா்களை பள்ளிக்கு வரவழைப்பதாக பெற்றோா் புகாா் தெரிவித்திருந்தனா். இதனடிப்படையில் மாணவா்களை பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது என்று தெரிவித்து பள்ளிகளுக்கு கல்வித்துறை சாா்பில் கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கல்வித்துறை உத்தரவையும் மீறி சுப்பிரமணியுபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் நடைபெற்றன. இது சமூக வலை தளங்களிலும் வெளியானது. இதையடுத்து முகக்கவசம் வழங்குவதற்காக மாணவா்களை பள்ளிக்கு வரவழைத்ததாக நிா்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுற்றறிக்கை புதன்கிழமை அனுப்பப்பட்டது. அதில், அரசு உத்தரவை மீறி மாணவா்களை வரவழைக்கும் பள்ளித் தலைமையாசிரியா்கள் மற்றும் பள்ளி நிா்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.