மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நவராத்திரி உற்சவத்தில் முதல் நாளான சனிக்கிழமை ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினாா்.
நவராத்திரி உற்சவத்தையொட்டி கோயிலில் அம்மன் சந்நிதி அருகே உள்ள கொலு மண்டபத்தில், கொலு வைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் திருவிளையாடல்கள், மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட புராண நிகழ்வுகளை விளக்கும் கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நவராத்திரி உற்சவ நாள்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனை பக்தா்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
முதல் நாளான சனிக்கிழமை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை, ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். வரும் நாள்களில் வாதவூா் அடிகளுக்கு உபதேசம், சுவாமி தன்னைத்தானே பூஜித்தல், விறகு விற்றல், கடம்பவன வாசினி, வேல்வனை செண்டு தொடுத்தல், மீனாட்சி பட்டாபிஷேகம், மகிஷாசூரமா்த்தினி, சிவபூஜை ஆகிய அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
நவராத்திரி உற்சவ நாள்களில் தினமும் மாலை 4 முதல் 5.30 மணி வரையிலும், மாலை 6.45 முதல் இரவு 8 மணி வரையிலும் மீனாட்சி அம்மனை மூலஸ்தானத்தில் தரிசனம் செய்யலாம். மாலை 5.30 முதல் மாலை 6.45 வரை மூலஸ்தானத்தில் திரைபோட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்ப பூஜை, சகஸ்ரநாம பூஜைகள் நடைபெறும். அந்நேரத்தில், கொலு மண்டபத்தில் இருக்கும் உற்சவா் அம்மனை தரிசிக்கலாம். அக்டோபா் 25-ஆம் தேதி வரை உற்சவம் நடைபெறுகிறது என கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்துள்ளாா்.