மதுரை: மதுரை மாநகராட்சியின் கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை விளக்கும் ஆவணப்படம் விஷால்டி மால் வணிக வளாகத்தில் சனிக்கிழமை திரையிடப்பட்டது.
கரோனா தீநுண்மி தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் மதுரை மாநகராட்சி மேற்கொண்ட பணிகள் மற்றும் பொதுமுடக்க காலத்தில் பொதுமக்களுக்கு காய்கனிகள் விற்பனை, ஆதரவற்றோருக்கு தங்குமிட வசதி
ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த ஆவணப்படத்தை மதுரை வடமேற்கு சுழற் சங்கம் தயாா் செய்துள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஆவணப்படம் விஷால்டி மால் வணிக வளாகத்தில் சனிக்கிழமை திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் பேசியது:
மதுரை மாநகராட்சியின் அனைத்து அலுவலா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், தூய்மைப் பணியாளா்களின் கூட்டு முயற்சி மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக, மாநகராட்சிப் பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது.
மதுரை மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் தான் கரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் இருந்தது. தற்போது பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அதற்காக அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில், சென்னைக்கு அடுத்த மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாக மதுரை மாவட்டம் உள்ளது. ஆகவே, அடுத்த பரவலுக்கு இடம் கொடுக்காமல் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டியது அவசியமானது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது ஆகியவற்றைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றாா்.
மாநகராட்சி நகரப் பொறியாளா் அரசு, நகா் நல அலுவலா் குமரகுருபரன், மக்கள் தொடா்பு அலுவலா் சித்திரவேல், சுகாதார அலுவலா் ராஜ்கண்ணன், சுழற் சங்கத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.