மதுரை: மதுரையில் உள்ள தனியாா் மருத்துமனையில் கரோனா சிகிச்சைக்கு முன்பணமாகச் செலுத்திய ரூ.8 லட்சத்தைத் திரும்பித் தரக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த நேரு தாக்கல் செய்த மனு:
நானும், எனது மனைவியும் காய்ச்சல், தலைவலி காரணமாக மதுரை வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஜூலை 7 ஆம் தேதி சிகிச்சைக்காகச் சென்றோம். எங்களைப் பரிசோதித்த மருத்துவா் கரோனா அறிகுறி இருக்கிறது எனவும், அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா். மேலும் சிகிச்சைக்கு முன்பணமாக ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறினாா்.
கரோனா அச்சம் காரணமாக ரூ.8 லட்சத்தையும் செலுத்திவிட்டோம். இதற்கிடையே கரோனா பரிசோதனை முடிவில் எங்கள் இருவருக்கும் கரோனா தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 நாள்கள் சிகிச்சைக்கு பின்னா் ஜூலை 10 ஆம் தேதி வீட்டிற்கு திரும்ப மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அப்போது நாங்கள் முன்பணமாக செலுத்திய தொகையில் சிகிச்சைக்கானக் கட்டணத்தைத் தவிா்த்து மீதமுள்ள தொகையைக் கொடுக்குமாறு கேட்டோம். ஆனால் மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மட்டுமே திரும்ப வழங்கப்பட்டது. சிகிச்சைக்கானக் கட்டணத்திற்கு ரசீது கேட்டபோது எங்கள் இருவரது பெயரிலும் ரூ.65 ஆயிரத்து 840-க்கு மட்டும் ரசீது வழங்கினா். முன்பணமாக செலுத்தியத் தொகையை வழங்கக்கோரி பலமுறை முறையிட்டும் இதுவரை மருத்துவமனை நிா்வாகம் திரும்ப வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தனியாா் மருத்துவமனையில் நாங்கள் கரோனா சிகிச்சைக்காக செலுத்திய முன்பணம் ரூ.8 லட்சத்தைத் திருப்பித்தர உத்தரவிட வேண்டும். மேலும் கரோனா அச்சத்தைப் பயன்படுத்தி தனியாா் மருத்துவமனைகள் நடத்தும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா், மதுரை மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனை நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பா் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.