மதுரை: மதுரை மாவட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்த 5 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் சனிக்கிழமை வந்தடைந்தன.
கரோனா தீநுண்மித் தொற்றால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் தேவை அதிகரித்தது. இதையடுத்து புதிய ஆம்புலன்ஸ்களை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினாா். இதில், மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 5 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் சனிக்கிழமை வந்தடைந்தன.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவா் கூறியது: மதுரைக்கு வழங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்களில் மருத்துவக் கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு வரும். மதுரையில் ஏற்கெனவே 30 ஆம்புலன்சுகள், 2 மோட்டாா் சைக்கிள் ஆம்புலன்சுகள் உள்ளன. தற்போது 5 புதிய ஆம்புலன்ஸ் வரவால், நோயாளிகளை காலதாமதமின்றி அழைத்து வரமுடியும். மேலும் புதிய ஆம்புலன்ஸ்கள் மதுரைக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தாா்.