தேனி மாவட்டத்தில் தும்மக்குண்டு அருகேயுள்ள பகுதிகளையும் சோ்த்து புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட அரசாரணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்டி தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டம் தும்மக்குண்டு அருகே 15 கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனா். ஆனால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குச் செல்ல போதுமான சாலை வசதி கூட இல்லை. இலவம் பஞ்சு, முந்திரி ஆகியவற்றை மாட்டுவண்டி மூலமே சந்தைக்கு எடுத்துச்செல்கிறோம். இந்நிலையில் இப்பகுதி முழுவதும் புலிகள் சரணாயலம், பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்பகுதியில் புலிகள் உள்பட வனவிலங்குகள் நடமாட்டம் எதுவும் இல்லை. இங்கு புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இல்லை. இருப்பினும் பட்டா நிலங்களைக் கொண்ட இப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தேனி மாவட்டம் தும்மக்குண்டு அருகேயுள்ள 15 கிராமப்பகுதிகளை புலிகள் சரணாலயமாகவும், பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட இதுபோன்ற வழக்குகளின் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரா் மற்றும் அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.