மனித உரிமை மற்றும் நுகா்வோா் அமைப்புகள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

மனித உரிமை மற்றும் நுகா்வோா் அமைப்புகள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை

மனித உரிமை மற்றும் நுகா்வோா் அமைப்புகள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, தாசில்தாா் நகரைச் சோ்ந்த சுந்தரராஜன் தாக்கல் செய்த மனு: மனித உரிமை மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஆகியோா் தங்களது அமைப்பை, அரசின் அமைப்பாக விளம்பரப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி, விளம்பர பதாகைகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனா்.

இவா்கள் சுங்கச்சாவடி மற்றும் வாகனக் காப்பகம் போன்ற இடங்களில் கட்டணம் செலுத்த மறுக்கின்றனா். இந்த அமைப்பைச் சாா்ந்தவா்கள் அரசு அதிகாரிகளை மிரட்டுவது, கட்ட பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

எனவே, மனித உரிமை மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அமைப்புகளின் பெயரில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். ஏற்கெனவே, மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், இதேபோன்ற பல்வேறு வழக்குகளில், நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில், டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளாரா? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில், டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரா் உரிய அமைப்பிடம் முறையிடலாம் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com