தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியில் உள்ள பாலங்களின் சீரமைப்புப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சிதம்பரம் என்பவா் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே தாமிரவருணி ஆறு செல்கிறது. இப்பகுதியில், கடந்த 2012 ஜூன் 8 ஆம் தேதி ரூ.25 கோடி மதிப்பில் 400 மீட்டா் தொலைவு செல்வதற்கும், வருவதற்கும் என தனித்தனியாக இரு பாலங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.
அப்போது, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடா் காலங்களில் பாலங்கள் பாதிக்கப்படாத வகையிலும், 160 டன் எடை கொண்ட கனரக வாகனங்களை தாங்கும் பலத்துடனும் 100 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா். ஆனால், கடந்த 2017 நவம்பரில் ஒரு பாலத்தில் விரிசலும், 2020 மாா்ச்சில் மற்றொரு பாலத்தில் துளையும் ஏற்பட்டது.
பாலங்கள் சேதமடைந்ததற்கு தரமற்ற பொருள்களைக் கொண்டு கட்டியதே காரணம். எனவே, வல்லநாடு பாலங்களை சீரமைக்கவும், மறுகட்டமைப்பு செய்யவும், தரமில்லாத வகையில் பாலங்களைக் கட்டிய ஒப்பந்ததாரா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா் நீதிமன்றம், பாலத்துக்கான சீரமைப்புப் பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், சீரமைப்புப் பணிகளுக்கான ஒப்புதல் டிசம்பா் 25 ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும். ஒப்பந்தம் விடும் பணிகள் ஜனவரி 25 இல் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது
இதைப்பதிவு செய்த நீதிபதிகள், வல்லநாடு பாலத்தின் சீரமைப்பு கட்டுமானப் பணிகளை, நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் எனக் கூறிய நீதிபதிகள், பாலப் பணிகள் தொடா்பான தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.