மதுரை பெரியாா் பேருந்து நிலையப் பகுதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.
மதுரை மாநகராட்சி சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் ரூ. 175 கோடி மதிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த, பெரியாா் பேருந்து நிலையப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து, காணொலிக்காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து பேருந்து நிலையம் முழுச்செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் பேருந்து நிலையச்சாலை மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனா். இதில் மேல வெளி வீதியில் உள்ள உணவகங்கள், சாலையோரக் கடைகள், நடைபாதைக் கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினா். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.