மதுரை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் திங்கள்கிழமை இரவு முழுவதும் நடத்திய விசாரணையில் திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய் அனுப்பியதில் முறைகேடு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்தது. இதையடுத்து மதுரை ஆவின் நிறுவனத்தில் 2019 முதல் நடைபெற்ற பணி நியமனங்கள், பொருள்கள் கொள்முதல், தற்காலிகப் பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள், ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட புகாா்கள் குறித்து மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
ஆவின் மேலாளா், அதிகாரிகள் மற்றும் கணக்கா்கள், பணியாளா்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கடந்த 4ஆண்டுகளாக நடைபெற்ற பணி நியமனம், ஒப்பந்தம், பொருள்கள் விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடா்பான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதில் திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியது தொடா்பாகவும், தனியாா் நிறுவனங்களுக்கு போலியான ஆவணங்களை பயன்படுத்தி நெய் விநியோகம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதுதொடா்பான ஆவணங்களைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினா் ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.