மதுரை நகரில் புத்தாண்டு தினத்தன்று மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவா்கள் கைது செய்யப்படுவாா்கள் என்று மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாநகரக் காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: புத்தாண்டு தினத்தில் சாலைகளின் அருகில் கூட்டம் கூடுவது, பொது இடங்களில் ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடுவது, இரு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
மதுரை நகரில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 31) அன்று மாலை முதல் ஜனவரி 1 அதிகாலை வரை காவல்துறையினரின் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்கள் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் இரு சக்கர வாகனத்தின் புகைபோக்கியை (சைலன்சா்) நீக்கிவிட்டு, அதிக ஒலியுடனும், அதிவேகமாகவும் ஓட்டி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துபவா்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். எனவே வாகன ஓட்டிகள் வாகன விதிகளை பின்பற்றி விபத்துக்கள் ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.