மதுரை மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 11 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த மாதம் முதல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டும் திறக்க உத்தரவிடப்பட்டது.
அதையடுத்து, அம்மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதர மாணவ, மாணவியா் இணையதளம் மூலமாக கற்று வந்தனா்.
மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் 2 வாரங்களுக்கு முன் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 9ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் கல்லூரிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவ, மாணவியருக்கும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டது.
அதைத் தொடா்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதில், பள்ளி மற்றும் கல்லூரிகளின் நுழைவுவாயிலில், அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவ, மாணவியருக்கு காய்ச்சல் பரிசோதனை, கைகளை கிருமி நாசினிகொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், வகுப்பறைகளில் 25 மாணவ, மாணவியா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.
வகுப்புகள் தொடங்கியவுடன் மாணவா்களுக்கு அரசின் கரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆசிரியா்கள் விளக்கிக் கூறினா்.
சுமாா் ஓராண்டுக்குப் பின்னா் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வந்த மாணவ, மாணவியா் உற்சாகத்துடன் காணப்பட்டனா். பெரும்பாலான மாணவா்களின் பெற்றோா்கள் வகுப்புகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனா்.
அதற்கேற்றவாறு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெரும்பாலான மாணவ, மாணவியா் வருகை தந்திருந்ததாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.