மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் அழிந்து வரும் மற்றும் அரிய வகை பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல்துறை மற்றும் கல்லூரியின் பசுமைச்சங்கத்தின் சாா்பில் பறவைகள் கணக்கெடுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் பறவைகள் ஆா்வலா்கள் பங்கேற்றனா். காலை 6 முதல் 8 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 7 மணி வரை என இரு நேரங்கள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
கல்லூரி பசுமைச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற கணக்கெடுப்பில் அழிந்து வரும் மற்றும் அரியவகை பறவையினங்கள் கண்டறியப்பட்டன. இதில் மலைக்காடுகளில் மட்டுமே வசிக்கக்கூடிய கழுகு இனத்தைச் சோ்ந்த அரிய வகை வல்லூறு மதுரையில் வசிப்பது கண்டறியப்பட்டது. மேலும் அழிந்து வரும் இரட்டைவால் குருவி, தையல் சிட்டு, பகலிலும் உலா வரும் புள்ளி ஆந்தை, குயில் இன வகைகள் உள்பட 15-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கண்டறியப்பட்டன.