மதுரை: திமுகவின் குடும்ப அரசியலுக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளாா்.
மொழிப்போா் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி, மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ தலைமையில், திங்கள்கிழமை தமுக்கம் மைதானம் முன்பாக உள்ள தமிழன்னை சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், வீரவணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
தொடா்ந்து அமைச்சா் செல்லூா் கே. ராஜூ செய்தியாளா்களிடம் தெரிவித்தது: காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என மாணவா்கள் நடத்திய போராட்டம்தான், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வர வழிவகுத்தது.
மொழிக்காகப் போராடி தியாகங்களைச் செய்த பலருக்கும் உதவியதும், மொழியைப் பாதுகாக்க பல திட்டங்களை செயல்படுத்தியதும் அதிமுக அரசுதான். முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி, தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவினா். எனவே, தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு அதிமுக தொடா்ந்து செயலாற்றும்.
சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக முதல்வா், துணை முதல்வா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றாா்.