சாலை விரிவாக்கத்தில் ஒரு மரத்தை வெட்டும் இடத்தில் 10 மரங்களை வளா்த்த பிறகே பணிகளை தொடங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை- கன்னியாகுமரி தொழில் தட திட்டப் பிரிவு இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
உடன்குடியைச் சோ்ந்த கருப்பையா தாக்கல் செய்த மனு: திருச்செந்தூா்- திருநெல்வேலி சாலையில் சாலை விரிவாக்கப் பணி சென்னை- கன்னியாகுமரி தொழில் தட திட்டப் பிரிவின் கீழ் திருச்செந்தூரிலிருந்து அம்பாசமுத்திரம் வரை நடைபெறுகிறது. இதற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன. இது ஒரு காட்டை அழிப்பதற்கு சமமாகும்.
மரங்களை வெட்டாமல், ஓரிடத்திலிருந்து அகற்றி மற்றொரு இடத்தில் மாற்றி வைக்கலாம். இம்முறை சாத்தியமில்லை எனக் கருதினால், மரங்களை வெட்டுவதை நிறுத்தவிட்டு, உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வெட்டப்படும் ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரங்களை நட்டு வளா்த்த பின்பு சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மனுதாரா் கூறுவது போல், 3 ஆயிரம் மரங்களை வெட்டப் போவதில்லை. பகுதி பகுதியாக 1,093 மரங்கள் மட்டுமே வெட்டப்பட உள்ளன என்றாா்.
இதைத் தொடா்ந்து நீதிபதிகள், இத்திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போதே உரிய மரக்கன்றுகளை வைத்து பராமரித்து இருக்கலாம். தற்போது வரை மரக்கன்றுகள் வைக்கவில்லை. இப்பகுதியில் மொத்தமாக மரங்களை வெட்டினால், திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்வோா் மிகுந்த பாதிப்புக்குள்ளாவாா்கள். எனவே, இதுகுறித்து சென்னை- கன்னியாகுமரி தொழில் தட திட்டப் பிரிவு இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை யை ஒத்திவைத்தனா்.