மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராய மண்டபத்தை சீரமைக்க நாமக்கல்லில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்கள் மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 2018-இல் நடந்த தீ விபத்தில் கோயிலின் ராஜகோபுரப் பகுதியில் உள்ள வீர வசந்தராய மண்டபம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, மண்டபத்தை சீரமைக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டது. சென்னையில் இருந்து நிபுணா் குழுவினா் தீ விபத்தில் சேதமடைந்த மண்டபத்தை பாா்வையிட்டு சீரமைப்பு தொடா்பாக ஆலோசனையும் அளித்தனா். இதைத்தொடா்ந்து நாமக்கல் பகுதியில் உள்ள குவாரியில் இருந்து கற்களை வெட்டியெடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் கற்கள் கொண்டு வரும் பணி தாமதமானது. இதற்கிடையில் கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து பொதுப்போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு தளா்வுகள் அளித்துள்ள நிலையில் நாமக்கல்லில் இருந்து கற்களை மதுரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி நாமக்கல்லில் இருந்து கனரக வாகனங்களில் கற்கள் ஏற்றப்பட்டு, மதுரை அவனியாபுரம் அருகே உள்ள செங்குளத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்தில் வெள்ளிக்கிழமை இறக்கப்பட்டன. இதையடுத்து தூண்கள் செதுக்கும் பணி தொடங்கியது.