பிறவிக் குறைபாடு காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்படும் சிறுவனுக்கு மருத்துவ உதவி கோரி அவரது பெற்றோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மாடசாமி (37). இவரது மனைவி ஜெயலெட்சுமி. இவா்களது மகன் சபரி (7). இவா் பிறக்கும்போதே உடல் உறுப்புகள் இடம் மாறிய நிலையில் இருந்துள்ளது. இதயம் வலது பக்கத்திலும், சிறுநீரகம் உள்ளிட்ட சில உறுப்புகள் இடம்மாறி இருந்ததால், சிறுவன் சபரிக்கு அடிக்கடி உடல்நலக் குறைபாடு இருந்து வருகிறது. அவருக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து இதுவரை ரூ.6 லட்சம் செலவழித்துவிட்ட நிலையில், உடல் நலக் குறைவு தொடா்ந்து இருந்து வருகிறது.
இதையடுத்து மருத்துவ உதவி கோரி மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். கட்டட வேலையில் கிடைத்த சம்பளத்தில் மருத்துவச் செலவுக்கு பெரும் தொகை செலவழித்துவிட்ட நிலையில், மேலும் செலவு செய்ய முடியாத அளவுக்குப் பொருளாதார நிலை உள்ளது. ஆகவே, மருத்துவ உதவி செய்யுமாறு மனுவில் தெவித்துள்ளனா்.