மதுரையில் தாயின் இடுப்பிலிருந்து தவறி விழுந்த குழந்தை, வேன் மோதி உயிரிழந்தது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி காளிமுத்து. இவா் தனது ஒன்றரை வயது மகள் மனோமீனாவுடன், பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் உறவினரை பாா்க்க திங்கழ்கிழமை சென்றுள்ளாா். அங்கு அவரை பாா்த்துவிட்டு மருத்துவமனை அருகே காளிமுத்து தனது மகளை இடுப்பில் வைத்துக்கொண்டு சாலையோரம் நின்றிருந்தாா்.
அப்போது தாயிடம் இருந்து குழந்தை மனோமீனா தவறி சாலையில் விழுந்துள்ளது. அதே நேரம் அவ்வழியாக வந்த சிறிய சரக்கு வாகனம் மோதியதில் குழந்தை பலத்த காயமடைந்தது. குழந்தையை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து காளிமுத்து அளித்தப் புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.