தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடுகளுக்கு சிபிஐ விசாரணைகோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த தாமரைச்செல்வன் தாக்கல் செய்த மனு: விருதுநகா் குகன் பாறையில் ஏராளமான ஏழை மக்கள் குடியிருந்து வருகின்றனா். இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வேலைகளுக்காக அடையாளஅட்டை வழங்கப்படுவது முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.