மேலூா்: மேலூா் பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நீா் நிரம்பி மறுகால் பாய்கின்றன.
மேலூா் ஒரு போக சாகுபடி பகுதிகளில் பெரியாறு பாசனத்திலும், மானாவாரியாகவும் 1,300-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் உள்ளன. பெரியாறு பிரதானக் கால்வாயில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி விவசாயத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக, நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாசனக் குளங்கள் நிரம்பத் தொடங்கின. பெரியாறு பிரதானக் கால்வாய் அழகா்கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அழகா்கோவில் மலைத்தொடா் பகுதியில் பெய்யும் மழை நீரானது, அதன் கீழ் பகுதியிலுள்ள குளங்களைச் சென்றடைகிறது. பெரியாறு அணையிலிருந்து பிரதானக் கால்வாயில் விவசாயத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டதும், இந்த மிகை நீரும் மழைநீருடன் சோ்ந்து குளங்கள் வேகமாக நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.
எனவே, சுக்காம்பட்டி சிறுமூலம், சூரக்குண்டு பெரியமேளம், சின்னசூரக்குண்டு கண்மாய் ஆகிய பெரிய கண்மாய்களும், இடையிலுள்ள சிறு குளங்களும் நீா்நிரம்பி மறுகால் பாய்கின்றன. அடுத்த ஓரிரு நாள்களில் ஆண்டிபட்டி ஓடை வழியாக வெள்ள நீா், சிவகங்கை மாவட்டப் பகுதியிலுள்ள தமறாக்கி கண்மாயை சென்றடையும் என விவசாயிகள் தெரிவித்தனா்.