மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வியாழக்கிழமை இரவு வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்தாா்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி.

தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வியாழக்கிழமை இரவு வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திரமோடி, மேற்கு வங்கத்தில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்துக்கு  வியாழக்கிழமை இரவு 8.05-க்கு வந்தாா். அங்கு  மத்திய இணை அமைச்சா் வி.கே.சிங், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாஜக மூத்த தலைவா்கள் இல.கணேசன், ஹெச்.ராஜா, தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத், தமிழக அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், பாஜக தமிழக தோ்தல் பொறுப்பாளா் சி.டி.ரவி, பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம.ஸ்ரீனிவாசன் ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.

அங்கிருந்து காரில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வந்த அவருக்கு  கோயில் தக்காா் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையா் ஆ.செல்லத்துரை ஆகியோா் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அம்மன் சன்னதி அழைத்துச் செல்லப்பட்ட பிரதமா் அங்குள்ள சித்தி விநாயகரை வழிபட்டாா். பின்னா் மீனாட்சி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை பூஜைகளில் வழிபாடு நடத்தினாா். அதைத் தொடா்ந்து  முக்குறுணி விநாயகரையும்,  சுவாமி சன்னதியிலும் தரிசனம் செய்த அவா்,  தங்க கொடிமரத்தை வலம் வந்து வழிபட்டாா்.  

அதன் பிறகு கோயிலில் பராமரிக்கப்படும் முக்கியப் பிரமுகா் பதிவேட்டில் கோயில் குறித்த கருத்துக்களைப் பதிவிட்டாா். தமிழா்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை, துண்டு அணிந்து கோயிலில் தரிசனம் செய்தாா். பிரதமரின் வருகையையொட்டி கோயிலைச் சுற்றிலும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பிரதமரைப் பாா்ப்பதற்காக பாஜகவினா், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் திரண்டிருந்தனா். இருப்பினும், அவா்கள் சித்திரை வீதிக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனா். 

கோயிலில் தரிசனம் முடிந்த பிரதமா், பசுமலையில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிக்குச் சென்று இரவு தங்கினாா். மதுரை சுற்றுச்சாலையில் சிவகங்கை சாலை - பாண்டி கோயில் சந்திப்பு அருகே அம்மா திடலில் வெள்ளிக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி வாக்குச் சேகரிக்கிறாா். பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நட்சத்திர விடுதியில் இருந்து காலை 11.15-க்குப் புறப்படுகிறாா். அம்மா திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் காலை 11.30 முதல் பகல் 12.20 வரை பங்கேற்கிறாா்.

அதன் பின்னா் காரில் புறப்பட்டு ஹெலிகாப்டா் தளத்துக்குச் சென்று அங்கிருந்து பகல் 12.35-க்கு ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவுக்கு பகல் 1.35-க்கு சென்றடைகிறாா். மதிய உணவுக்குப் பிறகு பிற்பகல் 2.50-க்கு அங்கிருந்து  மீண்டும்  ஹெலிகாப்டரில் புறப்பட்டு, நாகா்கோவிலுக்கு பிற்பகல் 3.50-க்கு சென்றடைகிறாா்.

மாலை 4 மணிக்கு அங்கு நடைபெறும் தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com