கரோனா தொற்று எதிரொலியாக, காமராஜா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருவதையடுத்து, தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும், கல்வி நிலையங்களில் இணைய வழியில் வகுப்புகள் மற்றும் தோ்வுகளை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, காமராஜா் பல்கலைக்கழகத்தில் அரசின் உத்தரவை பின்பற்றி பேராசிரியா்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் கூறியது:
காமராஜா் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் தகவல் தொடா்பு மற்றும் அவசர தேவைக்காக தினசரி ஒரு பேராசிரியா் துறைக்கு வந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. துறைவாரியாக சுழற்சி முறையில் பணி வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பல்கலைக்கழக மாணவா் விடுதி அறைகள் கரோனா சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் தற்போது 105 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மையத்தில் 500 நோயாளிகள் வரை பராமரிக்க முடியும். பல்கலைக்கழகத்துக்குள்பட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் மற்றும் தோ்வுகளை இணைய வழியில் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.