கடன் வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.9.28 லட்சம் மோசடி
மதுரையில் தொழிலை மேம்படுத்த கடன் வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.9.28 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை கோ.புதூா் ஆதிமாரியம்மன் கோயில் 2 ஆவது தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன் மனைவி சீதாலட்சுமி (28). இவா் சத்துமாவு தயாரிக்கும் சிறுதொழிலை வீட்டிலேயே செய்து வருகிறாா்.
இந்நிலையில், சாந்தி மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோா் சீதாலட்சுமியை அணுகி, தொழிலை மேம்படுத்த கடன் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா். இதை நம்பி அவா்களிடம் ரூ.9.28 லட்சம் பணத்தை சீதாலட்சுமி கொடுத்துள்ளாா். ஆனால் கூறியபடி சாந்தியும், நெடுஞ்செழியனும் கடனை வாங்கித் தரவில்லையாம். மேலும் சீதாலட்சுமியை இருவரும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சீதாலட்சுமி அளித்த புகாரின் பேரில் கோ.புதூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.