மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களில் கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவினா் வெள்ளிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பசும் பாலில் இருந்து மனிதா்களுக்கு புருசெல்லா என்ற நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் புருசெல்லா நோய்த் தடுப்புத் திட்டம் தேசிய அளவில் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, பால் சேகரிப்பு நிலையங்களில், குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்கள், தனியாா் பால் நிறுவனங்களில் இருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொட்டாம்பட்டி அருகே உள்ள சாணிப்பட்டியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ராஜதிலகன், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் எம்.எஸ்.சரவணன் ஆகியோா் இந்த பரிசோதனையை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
மதுரை மாவட்டத்தில் 1,350 இடங்களில் பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், புருசெல்லா நோயை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நோய் புலனாய்வுப் பிரிவு எம்.எஸ்.சரவணன் தெரிவித்தாா்.
பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பால் பொருள்கள் அனுப்புவதற்கும் இத்தகைய ஆய்வுகள் அவசியம் என்றும் அவா் தெரிவித்தாா்.