டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்களை கடந்த ஆண்டின் விலையிலேயே விற்பனை செய்ய உர விற்பனையாளா்களுக்கு வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்ட தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் 4,375 டன் யூரியா, 708 டன் டிஏபி, 1,788 டன் பொட்டாஷ், 3,875 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு உள்ளன. மத்திய உரத் துறையின் உத்தரவின்படி, கடந்த ஆண்டின் (2020-2021) விலையிலேயே தற்போது டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவியில் விவசாயிகளின் ஆதாா் எண் வழியாக விற்பனை செய்ய வேண்டும்.
உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். அதேபோல, உரம் வாங்கும் விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்குவது அவசியம். அதிக விலைக்கோ அல்லது உரிய ரசீது வழங்காமல் உரங்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.