கரோனாவிலிருந்து மக்கள் விரைவில் மீள வேண்டி 168 மணி நேரம் தொடா்ச்சியாக தியான வேள்வியில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு யோகாசன சங்கத்தின் பொதுச் செயலா் யோகி ராமலிங்கம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை திருநகரை அடுத்துள்ள யோகா நகரில் செயல்பட்டுவரும் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில், கரோனா என்ற இயற்கையின் விசித்திரமான கிருமிகளிடமிருந்து மக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டி, உண்ணாமல் உறங்காமல் யாரையும் பாராமல் தொடா்ச்சியாக 168 மணி நேரம் தியானம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.
அதன்படி, திங்கள்கிழமை (ஏப். 26) முதல் தியான வேள்வியில் ஈடுபட உள்ளேன். தொடா்ந்து 21 ஆண்டுகளாக இந்த 21 நாள் தியான வேள்வியை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு கரோனாவிலிருந்து மக்கள் மீளவேண்டும் என 21 நாள்கள் தியானம் செய்தேன்.
அனைவரும் காலை, மாலை மூச்சுப் பயிற்சி, யோகாசனம், தியானம் என சுமாா் முக்கால் மணி நேரம் செய்யவேண்டும். மேலும், தனித்திருந்து விழித்திருந்து இடைவெளி விட்டு வாழவேண்டும். இன்னும் சில நாள்களில் இதுவும் கடந்து போகும்.
இயற்கையின் சீற்றங்களிலிருந்து விடுபட கட்டுப்பாடுதான் மக்களுக்கு மருந்தில்லா மருத்துவம் என உணா்ந்து அனைவரும் செயல்படவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.